ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

''நான் வசந்தபாலன் ஆனது எப்படி?''

''என் அப்பா மின்சார வாரியத்தில் அக்கவுன்டன்ட். என் ப்ளஸ் டூ மார்க்ஷீட்டைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், 'என்னப்பா, அக்கவுன்டன்ட் பையன் பியூன் வேலைக்குக் கூடத் தேற மாட்டான்போல!'ன்னு கமென்ட் அடிச்சுட்டுப் போயிட்டார். நிச்சயம் நான் பியூன் வேலைக்கு லாயக்கில்லாதவன்னு எனக்கும் அப்பவே தெரியும். ஆனா, அதை வாய்விட்டு அப்பாகிட்ட சொல்ல முடியலை. காத்துட்டு இருந்தேன்... எனக்கான காலம் வரும்னு காத்துட்டு இருந்தேன்!'' - கண்கள் பார்க்கிறார் வசந்தபாலன். 'அங்காடித் தெரு' வின் வெயில் ஆல்பம் புரட்டிய இயக்குநர். சின்சியர் சினிமா என்பதில் தீவிரம் காட்டும் படைப்பாளி!



''விருதுநகர்ல பாலமுருகனாப் பிறந்து வளர்ந்தேன். பள்ளிக்கூடப் பருவத்துல இருந்தே சிவப்புச் சித்தாந்தங்கள் மேல ஆர்வம். கம்யூனிஸம், மீட்டிங் மேடை, காரக் கடலை, கார்ல்மார்க்ஸ், மூலதனம், டி.ஒய்.எஃப்.ஐ., லெனின், இரவு நேர வாழ்க்கைன்னு வெறியோடு திரிஞ்ச நாட்கள் நிறைய. நாலு பேர் முன்னாடி கூச்சம் பார்க்காமப் பேசுற தால, பேச்சுப் போட்டிகள்ல மேடையேறிப் பழக்கம். இலக்கியச் சோலைன்னு ஒரு அமைப்பு, சுனைன்னு ஒரு பத்திரிகை, சமூக சேவைகள்னு பம்பரமாத் திரிஞ்சேன். காலேஜ்ல நல்லாப் படிக்கிற பையன் அப்பப்போ சினிமாவுக்குப் போற மாதிரி, அப்பப்போ காலேஜ் கிளாஸ் ரூம் பக்கம் ஒதுங்கி பி.எஸ்சி., பாட்டனி முடிச்சேன். நான் எம்.ஏ., இங்கிலீஷ் படிக்கணும்னு அப்பாவுக்கு ஆசை. 'ஆனா, என் ஆசை அது இல்லையே'ன்னு சென்னைக்குக் கிளம்பிட்டேன். இங்கே கால்வெச்ச பிறகு தான் தெரிஞ்சது... சென்னை எவ்வளவு பிரமாண்டம்னு. ஓர் அப்பாவியை சென்னையின் ஒவ்வொரு தினமும் வெறிகொண்டு துரத்தும். என்னையும் துரத்துச்சு!


வளசரவாக்கத்துல சவுண்ட் எஃபெக்ட்ஸ் முருகேஷ் வீட்ல தஞ்சமடைஞ்சேன். சின்னச் சின்ன வேலைகள். அடுத்து எடிட்டர் லெனின், வி.டி.விஜயன்கிட்ட சேர்ந்து 35 படங்கள் வேலை பார்த்தேன். அப்பதான் 'ஜென்டில்மேன்' பட வேலைகள் ஆரம்பிச்சது. ஷங்கர் சார்கிட்ட சேர்ந்துட்டேன். 'முதல்வன்' டிஸ்கஷன் சமயம் வரை அவர்கூடவே இருந்தேன்.



நாலு வருஷம் நாயாப் பேயா அலைஞ்சு திரிஞ்ச பிறகு, முதல் பட வாய்ப்பு கிடைச்சது. 2002-ல் 'ஆல்பம்' ரிலீஸ். கிட்டத்தட்ட என் வாழ்க்கையைத்தான் படமாக்கி இருந்தேன். அந்தப் படைப்புல இருக்குற உண்மை நிச்சயம் அதை ஜெயிக்கவைக்கும்னு எனக்கு நம்பிக்கை. ஆனா, படம் ஃப்ளாப். அந்த உண்மை சுட்டுச்சு. இண்டஸ்ட்ரியில ஷங்கர் சார் அசிஸ்டென்ட்னா கழுத்துல எக்ஸ்ட்ரா காலர் முளைச்ச உணர்வு இருக்கும். எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. ஆனா, 'ஆல்பம்' படம் பண்ணப்போ, என்னைச் சுத்தி அவ்வளவு நெருக்கடி. அதுவரை எங்க அப்பாவைத் தவிர, என்னை யாரும் கட்டுப் படுத்த முயற்சித்தது இல்லை. ஆனா, அந்தச் சமயம் ஆளாளுக்கு என்னை கன்ட்ரோல் பண்ணிட்டு இருந்தாங்க. 'ஓ.கே. நம்மளைவிட அனுபவம் ஜாஸ்தி அவங்களுக்கு. நம்ம நல்லதுக்குத்தான் சொல்றாங்கபோல'ன்னு நினைச்சு, எல்லாத்துக்கும் 'சரி சரி' சொன்னேன். நான் நினைச்ச சினிமாவை எடுக்க முடியலை. ரெண்டு விஷயம் புரிஞ்சது. என்னதான் யதார்த்தமான படம் எடுக்க ஆசைப்பட்டாலும், அதுல மினிமம் சினிமா எலிமென்ட்ஸ் அவசியம். உலகமே உன்னைக் கடிவாளம் போட்டுக் கட்டுப்படுத்த நினைச்சாலும், உனக்குச் சரின்னு தோணுற விஷயத்தை, நீ ஆசைப்பட்ட விஷயத்தைச் செய்யத் தயங்காதே! ஆனா, இந்த விஷயங்கள் எனக்குப் புரிஞ்சுருச்சுன்னு யாருக்கும் புரியலை. அடுத்து படம் கிடைக்கலை.

இன்னொரு நாலு வருடம். துன்பங்களும் துயரங்களும் மட்டுமே துரத்தியடிச்ச காலம். முதல் படத்தைவிட, முதல் படம் சரியாப் போகாதவனுக்கு கிடைக்கிற ரெண்டாவது வாய்ப்பு குதிரைக் கொம்பு. என்ன பண்ணேன், ஏன் பண்ணேன்னு இப்பவும் ஆச்சர்யப்படுத்துற பல வேலைகளைப் பண்ணிட்டுத் திரிஞ்சேன். 'காதல்' படம் ரிலீஸாகி ஹிட். மனசுக்குள்ள எங்கேயோ ஒளிஞ்சு பட்டுப்போய்க்கிடந்த நம்பிக்கைச் செடி சின்னதாத் துளிர்த்தது. ஷங்கர் சார்கிட்டயே தஞ்சமடைஞ்சேன். 'வெயில்' அடிச்சது. 'பியூன் வேலைக்குக்கூட லாயக்கில்லை'ன்னு கமென்ட் அடிச்ச பக்கத்து வீட்டுக்காரர்ல இருந்து பலருக்குப் பதில் சொல்லிட்ட திருப்தி. அடுத்த படம் பத்தி யோசிச்சப்ப, நிறைய ஹீரோக்கள்கிட்ட இருந்து அழைப்பு. ஆனா, எனக்குக் கிடைச்ச ஸ்பேஸை மிஸ் பண்ணக் கூடாதுன்னு தோணுச்சு. 'அங்காடித் தெரு' புராஜெக்ட் ஆரம்பிச்சேன். 'அதான் உனக்கு சினிமா தெரியும்னு நிரூபிச்சுட்டல்ல! சூப்பர் ஹீரோ, நல்ல பேனர்னு படம் பண்ணி செட்டில் ஆக வேண்டியதுதானே?'ன்னு எல்லார்கிட்ட இருந்தும் அட்வைஸ். 'சரி சரி'ன்னு கேட்டுக்கிட்டேன். ஆனா, என் முடிவில் தீர்க்கமா இருந்தேன்.







நமக்கு இருக்குறது ஒரு வாழ்க்கை. அதுல எப்படி வாழ்ந்தோம்கிறதைவிட என்ன பண்ணோம்கிறதுதானே முக்கியம். 'உதிரிப் பூக்கள்', '16 வயதினிலே' படங்கள் ரிலீஸ் ஆனப்ப கூடவே நிச்சயம் வேறு பல படங்களும் ரிலீஸ் ஆகியிருக்கும்தானே. அந்தப் படங்கள் பேர் என்னன்னுகூட இப்ப யாருக்கும் தெரியாதே. 'நாயகன்', 'மனிதன்' ரெண்டு படங்களும் ஒண்ணாத்தானே ரிலீஸ் ஆச்சு. இப்பவரை எந்தப் படத்தை நாம சிலாகிச்சுட்டு இருக்கோம்? யதார்த்தமோ, கமர்ஷியல் சினிமாவோ எல்லாத்துக்கும் வலியும் வேதனையும் நிறைஞ்ச உழைப்பைத்தான் கொடுக்கிறோம். அதுல எது காலம் கடந்து நிக்கும்னு கொஞ்சம் யோசிச் சேன்!






என்னோட வளர்ச்சிக்கு அதிகாரபூர்வமா சவுண்ட் எஃபெக்ட்ஸ் முருகேஷ், லெனின், வி.டி.விஜயன், ஷங்கர் சாருக்கெல்லாம் நன்றிகள் ஆயிரம். ஆனா, இத்தனை தூரம் என்னை அடைகாத்து, அடையாளப்படுத்தியதில் என் இரண்டு நண்பர்களுக்குப் பெரும்பங்கு உண்டு. ஒண்ணாம் வகுப்பில் இருந்து இப்போ வரை நான் திரும்புறப்பலாம் என் தோளுக்குப் பக்கத்தில் இருக்கும் முருகன். சிலேட்டுல 'அ' போடுறதுல ஆரம்பிச்சு, வயசுக் காலத்துல ஆட்டம் போடுற வரை எப்பவும் கூடவே இருந்தவன். இப்போ நியூஜெர்ஸியில சாஃப்ட்வேர் இன்ஜினீயரா இருக்கான். இப்பவும் நான் பெருசா சம்பாதிச்சுடலை. ஆனா, எப்பவும் சம்பாதிக்காம இருந்த காலத்துல அவன் இல்லைன்னா... ஒண்ணு நான் தற்கொலை பண்ணிட்டு இருந்திருப்பேன். இல்லைன்னா ஏதாவது ஒரு கம்பெனியில கணக்கு எழுதி மேஜையைத் தேய்ச்சுட்டு இருப்பேன். எப்ப கேட்டாலும் டாலர்களில் பணம் அனுப்புவான். அந்த 'முருகன் டாலர்'தான் எனக்கு ஆதரவா இருந்துச்சு. 'எனக்குத் தெரியும்டா... உன்னால முடியும். நீ ஜெயிப்பேடா'ன்னு எந்தப் பிரதி பலனும் எதிர்பார்க்காம ஆறுதலும் தேறுதலும் சொல்லி என்னை அணைச்சுக் கொண்டுவந்தவன். எத்தனை தயக்கத்தோடு எப்போ உதவி கேட்டா லும், 'எவ்வளவு வேணும்?'னு மட்டும்தான் கேள்வி கேட்பான். லட்சங்களில் நீண்ட அவனோட நிதியுதவியைக் காட்டிலும், என் மேல அவன் வெச்சிருந்த நம்பிக்கை பல கோடி களுக்குச் சமம்.


 நண்பன் வரதராஜன். 'ஆல்பம்' பட சமயத்துல பழக்கமானவன். நிழல் மாதிரி கூடவே இருந்து நான் உடைஞ்சு விழாமப் பார்த்துக்கிட்டவன். கொஞ்சம் அப்பிடி இப்படி நான் தடம் மாறுறப்போ, என்னைத் திரும்ப உள்ளே இழுத்துப் போடுறவன். அந்த ரெண்டு நட்பும் இல்லைன்னா, நிச்சயம் இந்த வசந்தபாலன் இல்லை!''

கி.கார்த்திகேயன்,
Thanks:youthful.vikatan.com

கருத்துகள் இல்லை: